கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் தமிழகத்தில் அதிகப்படியான கந்துவட்டி வாங்கும் நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்துவட்டி தொடர்பாக காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள புகார்களை உடனடியாக எடுத்து சட்ட ஆலோசனைக்கு அனுப்பி அதன் பின்பு சட்டப்படி வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கந்துவட்டி வசூலிக்கும் அலுவலகத்தை சோதனை செய்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.