செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு பேருந்துக்கு சுங்கக்கட்டணம் வசூல் தொடர்பான பிரச்சனையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி கடந்த 25-ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளானது. சுங்கச்சாவடி ஊழியர்கள், அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் உடனான மோதலில் சுங்கச்சாவடி முழுவதும் சேதமானது.
சுங்கச்சாவடியில் நடைபெற்ற தகராறில், அலுவலகத்தின் லாக்கரில் வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுங்கச்சாவடி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகாரளித்தது. அங்கிருந்த கணிணி உள்ளிட்ட அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டதால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலேயே சென்று வருகின்றன. இந்நிலையில், சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது, பரபரப்பு சூழ்நிலையை பயன்படுத்தி 18 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பூபதிராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.