மதுரை : மதுரையில், 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின், பெற்றோர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல் துறையினர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மதுரை பிரசன்னா காலனியைச் சேர்ந்த 2 முதியவர்கள், சிறுமியிடம் தொடர்ச்சியாக, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, முருகேசன் (56), ரமேஷ் (55), ஆகிய இருவரையும் காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு .செந்தில் குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் முருகேசன், ரமேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் காவல் துறையினர், கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி