கடலூர் : கடலூர் பெண்ணாடம் கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி மரகதம்பாள் (80) இவர்களுடைய மகள்கள், சாமுண்டீஸ்வரி (55), ரமணி (45). இதில் சாமுண்டீஸ்வரிக்கு 2 மகன்களும், இந்த நிலையில் மரகதம்பாள், சாமுண்டீஸ்வரியின், மூத்த மகனும், பெண்ணாடம் பேரூராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலருமான சரண்ராஜ் பெயரில் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகளை எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு பங்கு தொகையை ரமணி மற்றும் அவரது கணவர் கண்ணனுக்கு, சாமுண்டீஸ்வரி கொடுக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ணன் கடந்த ஓராண்டாக கேட்டும், சொத்து பங்கை கொடுக்காமல் அவர்களை அலைக்கழித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கண்ணன் நேற்று சாமுண்டீஸ்வரியின், வீட்டிற்கு சென்று, தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சாமுண்டீஸ்வரி, இவருடைய கணவர் விஜயன்(60), விஜயனின் தம்பி பார்த்திபன்(60), ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் திரு. தீபன், தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த விஜயன், சாமுண்டீஸ்வரி, பார்த்திபன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கண்ணனை காவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.