தர்மபுரி:   ராஜஸ்தான் மாநிலம்  உதய்பூரில் 21-வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டிகளில்  இந்தியா முழுவதிலும்  இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.  தர்மபுரி மாவட்டம் மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், மாற்றுத்திறனாளியுமான வெங்கடேசன் பிரிஸ்டாப் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
இதேபோன்று 100 மீட்டர் நீச்சல் போட்டியில் அவர் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  இந்த  சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.  இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்

க.மோகன்தாஸ்.
 
                                











 
			 
		    



