சென்னை : சென்னையை அடுத்த நீலாங்கரை, சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம் (86), இவருடைய மகன் சுரேஷ் (53, இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மூதாட்டி செண்பகம், வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டனர். அதற்கு அவர், உடல்நலக்குறைவால் எனது தாய் செண்பகம் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு, சிமெண்டு வைத்து பூசி மூடிவிட்டதாகவும் கூறினார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி நீலாங்கரை காவல் துறையினருக்கு, அன்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திரு. மகேஷ்குமார், தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் டிரம்மில் அடைக்கப்பட்டு இருந்த மூதாட்டியின், உடலை மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால் டிரம்முடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி நீலாங்கரை, காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, செண்பகம் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.