அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே ஆயுதகளம், கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாலா (28), இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் மாலா தனக்கு சொந்தமான வயலில் டிராக்டர் உதவியுடன் உழவு செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மற்றும் ராஜேந்திரனின் மனைவி ரமணி ஆகிய 3 பேரும் மாலாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாலா ஜெயங்கொண்டம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் திரு. தமிழரசன், இளம்பெண்ணை தாக்கிய ரமேஷ், ராஜேந்திரன், ரமணி ஆகிய 3 பேர் மீதும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.