சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா ஆணையர், உதய்பாஸ்கருக்கு, தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கொழும்பில், இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பதம்ஜோதி (27), பரினா (28), ஆகிய 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர் . இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை, சோதனை செய்தனர்.
அதில் எதுவும் இல்லாததால் இருவரையும், தனியறைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி, வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், இலங்கை பெண்கள் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை, பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் ,சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.