கடலூர்: பண்ருட்டி–சென்னை சாலையில் தனியார் ஆயில் மில் ஒன்று உள்ளது. இங்கிருந்து கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் என்று அனைத்து வகையான எண்ணையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர், நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று அவர் பார்த்த போது, கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. மர்ம மனிதர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவடிவேல், உதவி-ஆய்வாளர் திரு.அழகிரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் பதிவான காட்சியில், உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு, 11 மணியளவில் முகமூடி அணிந்த மர்மமனிதர் ஒருவர் நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதற்கிடையே அந்த மர்மமனிதர் புகைப்பிடிப்பதற்காக தனது முகமூடியை கழற்றியுள்ளார். இந்த படம் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த மர்மமனிதர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, நிறுவனத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.