கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வாகனங்களில் சாராயம் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின் பேரில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு, உதவி- ஆய்வாளர் திரு.கவியரசன், சிறப்பு உதவி- ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் நேற்று காலை வண்டிப்பாளையம் சாலை ஊத்துக்கட்டு மாரியம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆட்டோவில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் பிரபாகரன்(27) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி கடலூர் வழியாக எம்.புதூர் கிராமத்துக்கு 300 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து கடத்தி சென்றதும் தெரியவந்ததும். இதையடுத்து பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்திலும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவிலும் சாராய பாக்கெட்டுகள் இருந்தது. அதை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், கடலூர் செம்மண்டலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மதியழகன்(38) என்பதும், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரைக்காடு கிராமத்துக்கு 300 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதியழகனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த சாராயம் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.