கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் நகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நகைக்கடை, வட்டிக்கடைகள், ஏ.டி.எம். மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தவும், குற்றச்செயல்களில் ஈடு படுவோரை எளிதில் கண்டுபிடிக்கவும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி முதல் கட்டமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.சரவணன், உதவி-ஆய்வாளர் திரு.சந்துரு மற்றும் காவல்துறையினர் முயற்சி எடுத்து கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல், ஜவான்பவன் சாலை ஆகிய இடங்களில் 5 அதிநவீன கேமராக்களை வைத்துள்ளனர். அதில் ஒன்று சுழலும் கேமரா உள்ளது.
வைபை மூலம் இயங்கக்கூடிய இந்த கேமராக்களை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் இருந்து காவல்துறையினர் கண்காணிப்பார்கள். இந்த பணிகளை நேற்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமசாமி இயக்கி தொடங்கி வைத்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன், காவல் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
தற்போது வைத்துள்ள கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் அண்ணாபாலம் சிக்னலில் இருந்து உழவர் சந்தை, சுரங்கப்பாதை, ஜவான்பவன் ரோடு ஆகிய பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை கண்காணிக்கலாம். தொடர்ந்து எஸ்.என்.சாவடி இணைப்பு சாலையில் உள்ள ஜவுளிக்கடை சிக்னல், சுப்புராயலு செட்டி தெரு, வண்டிப்பாளையம் சிக்னல், கம்மியம்பேட்டை பாலம் போன்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளனர். இதன் மூலம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கடலூர் திருப்பாதிரிப்புலியூருக்கு வரும் போது, அவர்களை எளிதில் அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்ய முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.