கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் தொடர்ந்து 7 இரு சக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பண்ருட்டி புதுப்பேட்டை பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(58) இவரது இருசக்கர வாகனம் நேற்றுமுன்தினம் 3 ம்தேதி வ.உ.சி. தெருவில் நிறுத்திவிட்டு சென்ற போது திருடுபோனது.
இதுபோல் திருவதிகை வால்கார தெருவை சேர்ந்த செந்தில்(30) இவரது இருசக்கர வாகனம், பண்ருட்டி லட்சுமிபதி நகரை சேர்ந்த கணேசன்(57) என்பவரது இருசக்கர வாகனமும், போலீஸ்லைன் சேர்ந்த முகமது அசாரூதீன்(30) என்பவரது இருசக்கர வாகனமும், சின்னசேமக்கோட்டை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40), கடலுார் கண்ணாரபேட்டை சேர்ந்த செல்வகுமார்(35), எல்.என்.புரம் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய 7 பேருடைய இருசக்கர வாகனங்கள் கடந்த 29 ம் தேதி முதல் 3 ம் தேதிக்குள் திருடுபோனது.
இதுகுறித்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.ஆரோக்கியராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.ஜவ்வாதுஉசேன், லுாயிஸ்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ரமேஷ்குமார், காவலர்கள் திரு.ராஜேந்திரபிரசாத், திரு.ஆனந்த், சபரிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ரோந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று பண்ருட்டி திருவதிகை ரயில்வே கேட் அருகில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த திருவதிகை குட்டை தெரு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பு என்கிற ஐயனார்(24) என்பவனை காவல் துறையினர் விசாரணை செய்ததில் இவன் கடந்த 5 ஆண்டுகளாக 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதும், பண்ருட்டி காவல் சரகத்தில் 7 இருசக்கர வாகனங்களும், திருவெண்ணைநல்லுார் காவல் சரகத்தில் ஒரு இருசக்கர வாகனமும், நெல்லிக்குப்பம் காவல் சரகத்தில் ஒரு இருசக்கர வாகனமும் திருடியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் அதிகாரிகள் ஐயனாரிடம் 10 இருசக்கர வாகனங்களை அதிரடியாக கைப்பற்றினர்.பிடிபட்ட ஐயனார் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திருடிய இருசக்கர வாகனங்களை புதுச்சேரிக்கு சென்று
விற்றுவருவதும், மேலும் திருடு போன நபர்களிடம் போனில் பேசி உங்கள் இங்கே இருந்தது என கூறி அதற்குபணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து ஐயனார் கைது செய்தனர்.