கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரா பகுதியில் பீகாரை சேர்ந்த நௌசாத் என்பவர் குடும்பத்துடன் தங்கி வந்தார். இவர் 06.06.2018-ம் தேதியன்று 11 மணிக்கு குடும்ப தகராறில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். இக்கொலை சம்பவம் குறித்து மலப்புரம் வெங்கரா காவல் நிலைய காவலர்கள் குற்றவாளியை தேடி வந்தனர். பின்னர் குற்றவாளி தனது சொந்த ஊரான பீகாருக்கு தப்பிச் செல்லக்கூடும் என கருதி அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து இரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ரோஹித்ராதன் ராஜகோபால் இ.கா.ப அவர்களின் ஆலோசனையின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பீகார் செல்லும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான காவலர்கள் 06.06.2018-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கேரளாவிலிருந்து பீகார் செல்லும் டன்பாத் விரைவு ரயிலை சோதனை செய்த போது அதில் பொதுப்பெட்டியில் தனது குழந்தைகளுடன் பதுங்கி இருந்த நௌசாத்தை கைது செய்தனர். பின்னர் மலப்புரம் வெங்கரா காவல் நிலையத்திலிருந்து வந்த காவலர்களிடம் ஒப்படைத்தனர்.