கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு காவல் உதவி- ஆய்வாளர் திரு.ஆனந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது திருமாணிக்குழி கிராமத்தில் மணல் ஏற்றி வந்த மாட்டுவண்டிகளை மறித்து, அதை ஓட்டி வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், எம்.புதூரை சேர்ந்த கஜேந்திரன்(41) சிவநாதன்(55) முத்துராமன்(47) கண்ணதாசன்(31) ஜெயக்குமார்(34) சுந்தரமூர்த்தி(37) பச்சையப்பன்(55) சண்முகமூர்த்தி(50) பரமசிவம்(40) ஆகியோர் என்பதும், திருமாணிக்குழி கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 9 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பண்ருட்டி காவல் உதவி- ஆய்வாளர் கிருஷ்ணபிரியா தலைமையிலான காவல்துறையினர் மேலப்பாளையம் இலுப்பைத்தோப்பு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அசோக்(32) ரமேஷ்(34) ஆகியோரை கைது செய்தனர், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கீழிருப்பு கிராமத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ரத்தினவேல்(46), ஜெயசிங்(55) ஆகியோரை காடாம்புலியூர் காவல் உதவி- ஆய்வாளர் திரு.டைமண்ட் துரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார். இதேபோல் ரெட்டிச்சாவடி காவல் உதவி- ஆய்வாளர் திரு.தேவேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சின்னகங்கணாங்குப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த 4 லாரிகளை மறித்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வானூரை சேர்ந்த ராதா கிருஷ்ணன்(42) கமலகண்ணன்(27) மணிவண்ணன் (40) கிளியனூரை சேர்ந்த சரவணன்(35) ஆகியோர் என்பதும், கடலூர் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.