திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரயில்வே போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கஞ்சா, போதை பொருள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். பள்ளிக்கு ரயில் மூலம் மாணவர்கள் பலர் பயணம் மேற்கொள்வதால் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தனர். ரயில்வே தண்டவாளங்களை கடத்தல், செயின், செல்போன் பறிப்பு, போன்ற சம்பவங்களை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு ரயில்வே போலீசார் எடுத்துரைத்தனர்.
மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ரயில் நிலையங்களில் ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாகவும், அதனைத் தவிர்த்து பாதுகாப்பாக செல்வது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அவசர உதவி மற்றும் புகார் அளிப்பதற்கான எண்களை அப்போது மாணவர்கள் குறித்து வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மத்திய ரயில்வே பாதுகாப்பு படை: 139, தமிழ்நாடு ரயில்வே போலீஸ் உதவி எண்: 1512, சைபர் குற்றங்களுக்கு 1930, குழந்தைகள் பாதுகாப்பு: 1098, பெண்கள் பாதுகாப்பு எண்: 182 ஆகிய புகார் எண்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு