தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள், ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.S.தங்ககிருஷ்ணன் அவர்கள், கிராம கண்காணிப்பு காவல் அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அதிகாரிகளை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, கிராம கண்காணிப்பு காவல் அதிகாரிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள ஊர் முக்கியஸ்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்தில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள், சட்டவிரோத செயல்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்கள், போதை பொருட்கள், மதுபானம், கஞ்சா பதுக்கும் நபர்கள், விற்பனை செய்பவர்களை பற்றிய தகவல்களையும் மேற்படி முக்கியஸ்தர்கள் மூலம் சேகரிக்க வேண்டும் என்றும், தகவல்கள் கொடுப்பவர்களை தொடர்பு வைத்து தகவல்களை சேகரிப்பதற்கு வாட்ஸ்அப் மூலமாக குழுக்கள் அமைத்து அதன்மூலம் தகவல்கள் சேகரித்து அந்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறான தகவல்களை கிராம கண்காணிப்பு காவல் அதிகாரிகளுக்கு கிராம முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் உரிய தகவல்களை காலதாமதமின்றி தெரிவிக்கும் பட்சத்தில், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் மேற்படி குற்றச் செயல்கள் சமுதாயத்தில் முற்றிலும் தடுக்க வழிவகையாக இருக்கும் என்றும் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் மூலம் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சமுதாய விழிப்புணர்வுடன் கூடிய நல்லுறவு ஏற்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.