உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம்.
உத்தரபிரதேசத்தின் ஹாசிபாத்தைச் சேர்ந்த 37வயது அரசு அதிகாரி, தனது மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார். அவருடையை இமெயிலுக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், உங்களுடைய 11 வயது மகனை கொன்றுவிடுவேன். 13 வயது மகளை கடத்தி விடுவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தந்தைக்கு அடுத்த அதிர்ச்சியாக வீட்டில் நடக்கும் சம்பவங்களை விவரமாக குறிப்பிட்டு மெயில் வந்துள்ளது.
வீட்டில் நடக்கும் சம்பவங்கள் எப்படி யாருக்கோ தெரிகிறது? கேமரா இருக்கிறதா என பல சந்தேகங்களால் குழம்பியுள்ளார் அரசு அதிகாரி. மிரட்டல் மின்னஞ்சல்கள் எல்லாம் மனைவியின் இமெயில் ஐடியில் இருந்து வருவது மற்றொரு அதிர்ச்சி. ஆனால் மனைவி இதில் ஈடுபடவில்லை. அதேபோல் கணவனின் மின்னஞ்சலில் இருந்து மனைவிக்கு மிரட்டல் மின்னஞ்சல் வருகிறது. ஒருகட்டத்தில் தனக்கு ரூ.10 கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குழந்தைகளை கொன்றுவிடுவோம் என மிரட்டல் அடுத்தக்கட்டத்தை எட்டுகிறது.
தாங்கள் மிகப்பெரிய ஹேக்கிங் கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளதை உணர்ந்த அரசு அதிகாரி போலீசாரை அணுகியுள்ளார். விசாரணையை தொடங்கினர் போலீசார். மெயில் வருவதும், மெயில் அனுப்பப்படுவதும் ஒரே ஐபி அட்ரஸ் என்பதை தெரிந்துகொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு அதிகாரிக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பி அவரது மகன், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யாரென்று போலீசார் கண்டுபித்துள்ளனர். அது அரசு அதிகாரியின் 11 வயது மகன். இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி, மெயில் வந்ததும் போனதும் ஒரே ஐபி முகவரிதான். இதனைக் கொண்டு குடும்ப உறுப்பினர்களை தீவிரமாக விசாரித்தோம். அப்போது 11வயது மகன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பள்ளியில் கடந்த ஆண்டு விழிப்புணர்வுக்காக ஹேக்கிங் தொடர்பான கேம்ப் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் சிறுவனுக்கு ஹேக்கிங் மீது ஆர்வம் வந்ததுள்ளது. இதனை அடுத்து யூ டியூப் மூலம் மெயிலை ஹேக்கிங் செய்வதை கற்றுக்கொண்டுள்ளான் சிறுவன். அதனை தன் தந்தையிடமே விளையாட்டாக தொடங்கி தொடர்ந்துள்ளான் என்றார். இது குறித்து போலீசாரிடம் விளக்கம் கொடுத்துள்ள சிறுவன்,
இவற்றையெல்லாம் ஜாலிக்காகவே செய்தேன். போலீசார் வரை விவகாரம் செல்லும் என தெரியாது என்று தெரிவித்துள்ளான். சிறுவன் மீது வழக்கு ஏதும் பதியப்படாத நிலையில் அவனுக்கு முழு அறிவுரை கொடுத்து போலீசார் சிறுவனை அனுப்பி வைத்துள்ளனர்.