நாகை : நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மட்டும் ரூ.1 கோடியே 33 லட்சத்து 12 ஆயிரத்து 800 மதிப்பிலான 1331.28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 படகுகள், 4 கார்கள், 2 சரக்கு வாகனங்கள், 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரு படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 69 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் ரூ.1 கோடியே 11 லட்சத்து 34 ஆயிரத்து 35 மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. திருட்டு போன ரூ.82 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 2022- ம் ஆண்டில் வாகன விபத்தில் ஈடுபட்ட 1,123 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்து 444 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 175 மோட்டார் சைக்கிள்கள், 1 லோடு ஆட்டோ, 5 கார் என மொத்தம் 181 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராய வழக்குகளில் தொடர்புடைய 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட 36 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.