சென்னை : சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில் நடித்துக் காட்டுவதற்காக தூக்கு மாட்டிய (11) வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாதவரம் அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய இளைய மகன் கார்த்திக். 11 வயதாகும் கார்த்திக் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி அளவில் சீனிவாசனின் இளைய மகன் கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பதை நடிப்பதற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு நடித்து காட்டியுள்ளார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக நடிப்பு நிஜமாகி கார்த்திக் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அண்ணன் தன் வீட்டின் அருகே வேலை செய்திருந்தவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். இதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த கார்த்தியின் தாய் கதறி அழுவது பார்ப்போர் கண்களை கலங்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.