சென்னை : சென்னை வேப்பேரியில், உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்புக்கான (டிராபிக் வார்டன் ஆர்கனிசேஷன்) அலுவலகத்தை, காவல்ஆணையர் திரு. சங்கர் ஜிவால், திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வரும் அமைப்பாகும். 142 பேர் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். புதிதாக பெண்கள் உள்பட 24 பேர் நியமிக்கப்படவும் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 415 நிகழ்ச்சிகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்காக நடத்தப்பட்டிருக்கின்றன. 470 பள்ளிகளில் 18 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சாலை பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்கள் மூலமாக அந்தந்த பள்ளிகள் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.
சென்னையில் அதிக விபத்துகள் நடப்பதை தடுக்கும் நோக்கில், நகரில் அபாயகரமான பகுதி என்ற வகையில் 104 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் என்ஜினீயர்கள், மாநகராட்சிகள், ஐ.ஐ.டி. பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணியவேண்டும். போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட பல்வேறு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டில் 20 சதவீத விபத்து-மரணங்கள் குறைவு தான். 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையும். போக்சோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொது இடங்களில் அத்துமீறல் இதுதொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாரை நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். தற்போது வரை சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல் நிறுவனத்தினர் மீது புகார்கள் வரவில்லை. புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.