சென்னை : போதை மாத்திரைகளை வீட்டுக்குச் சென்று டெலிவரி Zomato ஊழியர் கைது. போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கீழ்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு போதை மாத்திரை வேண்டுமென கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை எடுத்து வந்த போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டார். விசாரணையில் அந்த நபர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த முனியசாமி(20) என்பது தெரியவந்தது. இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது Zomato வில் டெலிவரி பாயாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் போதை மாத்திரைகளை வீட்டுக்குச் சென்று டெலிவரி செய்தால் அதிக அளவில் பணம் கொடுப்பார் எனவும் முனியசாமி தெரிவித்துள்ளார். சொமாட்டோவில் போதை மாத்திரைகள் எடுத்துச் சென்றால் காவலர்களுக்கு சந்தேகம் வராது என்பதால் தான் பணத்திற்கு ஆசைப்பட்டு டெலிவரி செய்து வந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களாக போதை மாத்திரைகள் டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து முனியசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 610 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜியை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.