சென்னை : சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார்.கார்த்திகேயன் தனது செல்போனில் புதிய அறிவிப்புகள் என்ற யூடியூப் சேனலை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் என்ற தலைப்பில் ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தவறான தகவல் பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சிடைந்த கார்த்திகேயன் இது குறித்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள நியாய விலை கடைக்குச் சென்று விசாரித்துள்ளார். அரசு ஏதேனும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதா எனக் கேட்டுள்ளார். இது போன்ற எந்த அறிவிப்பும் தற்போது வரை வரவில்லை என நியாய விலைக் கடை ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்.
இந்த போலி அறிவிப்பு குறித்து கார்த்திகேயன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகிரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த (22), வயதான ஜனார்த்தனன் ரெட்டி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை போட்டோ எடுத்து அதில் வாசகங்களை மாற்றி தனது youtube சேனலில் பதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற செய்திகளை யூடியூபில் பதிவிட்டால் அதிக வியூவர்ஸ் கிடைப்பதால் தனக்கு அதிக வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனார்த்தனன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.