திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் விமல். இவர் மீஞ்சூர் பஜாரில் பிரகாஷ் தங்க மாளிகை என்ற பெயரில் நகை கடையும், அடகு கடையும் நடத்தி வருகிறார். வியாழக்கிழமை வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை கடைக்கு விடுமுறை அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை நகை கடையின் ஷட்டர் திறந்திருப்பதை கண்ட பக்கத்து கடைக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் விமல் காவல்துறைக்கு தகவல் அளித்து கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த புதிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் அடங்கிய லாக்கர் உடைக்கப்படாமல் அப்படியே இருந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் இன்று அதிகாலை 2மணி அளவில் மர்ம நபர்கள் 4பேர் ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே கடைக்குள் புகுந்து கல்லா பெட்டியின் அருகே இருந்த லாக்கரை திறப்பது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நகைக்கடையில் பூட்டை உடைத்து சுமார் 5லட்ச ருபாய் மதிப்பிலான அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு