சென்னை : சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி திருப்பூர் குமரன் தெருவில், பிரபல சினிமா பாடலாசிரியர் கபிலன் வசித்து வருகிறார். இவர் தமிழில் கில்லி படத்தில் அர்ஜூனரு வில்லு உள்பட பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவரது மகள் தூரிகை (28), இவர் எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று பன்முகத் திறமை உள்ளவராக இருந்து வந்தார். பீயிங் உமன் என்ற இதழையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது அம்மா உஷா இதனை பார்த்து அலறியடித்து வெளியே ஓடி வந்து எனது மகளை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து, தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். காவல்துறையினர், நடத்திய விசாரணையில் பெற்றோர் தூரிகையை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதன் பேரில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.