திருப்பூர் : திருப்பூர் போடிப்பட்டி உடுமலை, குற்ற சதவீதம் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் உடுமலை உட்கோட்டத்துக்குட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களின் பதிவேடுகளை மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) திரு.முத்துச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தீர்க்கப்படாத வழக்குகள், குற்ற சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, உடுமலை உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் கண்டுபிடிக்கப்படாத குற்றங்களின் சதவீதத்தை குறைக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, களவு போன பொருட்களை மீட்பது ஆகியவை குறைந்த பட்சம் 90 சதவீதம் ஆக இருக்க வேண்டும். உடைமை இழந்து தவிப்பவர்களுக்கு பொருட்களை மீட்டு கொடுப்பதில் போலீசார் விரைந்து செயல்பட வேண்டும். மேலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்குகளில் போலீசார் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து வரும் அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையில் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்.
விபத்துக்களைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும்.பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு வாரத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் பொதுமக்களிடம் போலீஸ் துறை சார்ந்த குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்கோட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்கள் மூலமும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிராமங்களில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது, உடுமலை, குடிமங்கலம் போலீஸ் நிலையங்களை 2 ஆக பிரிப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலித்து கருத்துரு அனுப்பப்படும் இவ்வாறுஅவர் கூறினார். இந்த ஆய்வின்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழி வேல், உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர்திரு.ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.