இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதி புண்ணியஸ்தளம் என்பதால், இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மதுபான கடைகளை திறக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால் கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக ராமேஸ்வரம் தீவில் உள்ள சிலர் பாம்பன், மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து அதை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். ராமேஸ்வரத்தில் குடிசை தொழிலாக பலரும் இதைச் செய்து வருகின்றனர். கடந்த மாதம் கூட ஒரு நபர் பாம்பனிலிருந்து மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி மதுபாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து அந்த நபர் மீது பாட்டில் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்று குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா அதிகளவில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன், தனிப்படை அமைத்து ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார். கடந்த 15 நாட்களில் 1,500-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விற்பனை செய்த 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளார். ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் தொடர்ந்து மக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள், பொது இடத்தில் மதுபானம் அருந்துபவர்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக பொது மக்கள் புகார் மற்றும் தகவல் தெரிவிப்பதற்காக துணை காவல் கண்காணிப்பாளர் 98847 41609 என்ற செல்போன் எண்ணை அறிவித்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார். போதை பொருள் கடத்தும் நபர்களை கண்டறிந்து அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி வருவதாக துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒரே நாள் இரவில் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் 175 மது பாட்டில்கள், சுமார் 1 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கையால் போதைப் பொருள் விற்பவர்கள் மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டு வருவது ராமேஸ்வரம் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.