நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை. இவைகளை சாப்பிடுவதை தவித்துக் கொள்ள வேண்டும். இவைகளை சாப்பிடுவதன் மூலம் 1 நாளில் கிடைக்க வேண்டிய கலோரிகள் சில மணி நேரத்திலே கிடைத்து விடுகிறது.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது.
மென்று முழுங்கி சாப்பிட வேண்டும் : மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும்.
வெளியே சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள் : முடிந்த அளவு ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். வீட்டிலே சமைத்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் இருமடங்காகும். இரவு நேரங்களில் பசி எடுக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த சூழ்நிலையில் சாப்பிட வேண்டாம் : மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது : ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல் ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.