டெல்லி : தெற்கு டெல்லி பகுதியில் உள்ள லோதி காலனியில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பீகாரை சேர்ந்த விஜயகுமர், அமர் குமார் என்பவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களுடன் பணியில் இருந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் ஒருவன் இருந்தார். இந்நிலையில் சிறுவனை பலிகொடுத்தால் புதையல் மற்றும் சொத்துகள் கிடைக்கும் என்று இரு இளைஞர்களும் நம்பியுள்ளார்கள். இதன் அடிப்படையில் 6 வயது சிறுவனுக்கு முதலில் போதைப் பொருளை கொடுத்து, அவன் மயக்கமடைந்த நிலையில் தங்களது குடிசைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், வீட்டிலிருந்த பொருளால் சிறுவனை தாக்கிய பின்னர், சமையல் கத்தியை எடுத்து சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இரவு 10.30 மணியளவில் நடந்திருக்கிறது. இதற்கிடையே, சிறுவன் காணாமல் போனது குறித்து அவனது பெற்றோர் தேடியுள்ளனர். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் விஜயகுமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிலுக்கு அடியில் இரத்தம் கசிந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் விஜயகுமார், அமர்குமாரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சமையலறை கத்தி மற்றும் குற்றத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணிந்திருந்த ஆடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிறுவனின் தந்தை தனது புகாரில், இரவு உணவுக்குப் பிறகு கட்டுமான தளத்தில் சில பெண்கள் பஜனை பாடிக்கொண்டிருந்ததாகவும், அவரது மகன் அருகில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.