சென்னை : தமிழகத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு விதமான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்த தமிழகம் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பகுதிகளில் காவல்துறையின் இசைக் குழுக்கள் மூலமாக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வழக்கமாக, காவல்துறை அணிவகுப்பு, உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் விழாக்களில் மட்டுமே காவல்துறை இசைக்குழு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல் இசை குழு என்ற குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின், காவல் துறை இயக்குனர் முனைவர் திரு.பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் அவர்கள் உள்ளார்கள்.
தமிழக காவல்துறை பேண்ட் வாத்திய இசைக்குழுவினர், தேசிய அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவது வழக்கம். இந்த ஆண்டும், மதிப்புமிகு காவல்துறை இயக்குனர் முனைவர் திரு.பிரதீப் வி பிலிப் ஐபிஎஸ் அவர்களுடைய உத்தரவின்படி, காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை திரு.சங்கர் ஷிவால் ஐபிஎஸ் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சி மையம் திருமதி.பி.ஆர். வெண்மதி ஐபிஎஸ் அவர்களின் ஆலோசனையின்படியும், திரு.உதயகுமார் தமிழ்நாடு சிறப்பு காவல் பயிற்சி மையம் அவர்களின் தலைமையிலும், சார்பு ஆய்வாளர் திரு.ஹேரி பிலிப்ஸ் பேண்ட் மாஸ்டர் மற்றும் திரு.கே.ஆர்.பவுல் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி பேண்ட் கோச் ஆகியோர் செகந்திராபாத்தில் நடைபெறவுள்ள 20 வது அகில இந்திய காவல் வாத்திய போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக தமிழக காவல் வாத்திய இசைக் குழுவினர், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும், காவல் வாத்திய குழுவினர் தங்களது திறனை மேம்படுத்தும் பயிற்சிக்காகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணப்வு ஏற்படுத்தும் விததாக, சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 7, 8, 9) ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆறாவது நுழைவுவாயிலில் இன்று (பிப் 7) மாலை 4 மணி முதல் 5 மணி வரை வரையிலும், நாளை வேளச்சேரி பீனிக்ஸ் மால் சுல்தான் பிரியாணி கடை நுழைவு வாயிலில், மாலை 4 மணி முதல் 5 மணி வரை வரையிலும், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வடபழனி விஜயா ஃபோரம் மால் நுழைவு வாயிலின் வலது புறம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு, போட்டியில் கலந்து கொள்ள இருக்கும், நம் தமிழக காவல்துறையினரை உற்சாகப்படுத்தும் மாறு கேட்டுக் கொள்ளபடுகின்றார்கள்.